வங்கிகளில் வழக்கமான சேவைகள் நடைபெறாது :அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டுமே மார்ச் 31 ல் திறப்பு- உயர் அதிகாரிகள் விளக்கம்

Admin 11 months ago

சென்னை: நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான வரும் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில், அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என்றும், பொதுமக்கள் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இது தவறான தகவல் என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். இந்நிலையில், இந்த நிதியாண்டு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதியாகவும், வருமானவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கு வசதியாகவும் அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் வரும் 31-ம் தேதியன்று செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. மற்ற கிளைகள் அன்றைய தினம் செயல்படாது. மேலும், அன்றைய தினம் பொதுமக்களின் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இது தொடர்பாக, சமூகவலை தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்