புதுச்சேரி அரசு நிதி பற்றாக்குறை அனைத்து கண்டனங்களும் உயர்வு : ஒன்றிய அரசு நிதி முன் வர வேண்டும் கோரிக்கை

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடுத்ததால் ரூ. 177 கோடி செலவாகி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது புதுச்சேரி. இந்நிலையில், மத்திய அரசின் நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து மதுபான உரிமக்கட்டணமும் உயர்கிறது. டூவீலர், கார் பதிவு கட்டணமும் அதிகரிக்கவுள்ளது.ஃபெஞ்சல் புயல், அணைகள் திறப்பால் கிராமப்பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் புதுச்சேரி மக்கள் இம்முறை கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி நிவாரணங்களை அறிவித்தார். முதல் கட்டமாக 3.54 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை தரப்பட்டது. இதனால் ரூ. 177 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.மேலும் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்து ஆய்வு செய்து சென்றனர். மத்திய அரசிடம் ரூ. 614 கோடி கோரி கடிதமும் முதல்வர் ரங்கசாமி தந்துள்ளார். தமிழகத்துக்கு உதவி கிடைத்துள்ள சூழலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியிலுள்ள புதுச்சேரிக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை என்ற பேச்சு மக்களிடம் எழுந்துள்ளது.அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு வரி, கட்டண உயர்வை கையில் எடுத்துள்ளது. கடும் நிதி சுமையை சமாளிக்க அடுத்தடுத்து கட்டணங்களை புதுச்சேரியில் உயர்த்த வேண்டியுள்ளது. புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்குள் அடுத்த அறிவிப்பாக புத்தாண்டு முதல் பெட்ரோல் டீசல் கட்டணம் லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்ந்தது.