ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

மண்டபம்: ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மார்ச் 16ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 58 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திதில்,‘இலங்கையில் சிறையில் உள்ள 58 மீனவர்களையும், பறிமுதல் செய்த 7 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏப்.8ம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ராமேஸ்வரம் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதுவரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது’’ என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மீனவர்கள் தொடங்கினர். இந்த போராட்டத்தால் மீன்பிடி மீனவர்கள் மற்றும் அது சார்ந்த பணிகள் செய்யக்கூடியவர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.