தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரை கொண்ட குழு தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரை கொண்ட குழு கடந்த 14–ம் தேதி தேர்வு செய்தது. மறுநாள் இருவரும் தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இதற்கிடையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்துக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த மனு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.